தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம், ஒருதலைக்காதலால் இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? 4 வாலிபர்களிடம் கடலூர் போலீசார் விசாரணை


தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம், ஒருதலைக்காதலால் இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? 4 வாலிபர்களிடம் கடலூர் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 July 2019 10:30 PM GMT (Updated: 30 July 2019 10:43 PM GMT)

இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரு தலைக்காதலால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து 4 வாலிபர்களிடம் கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர் முதுநகர்

கடலூர் முதுநகர் அருகே உள்ள ஜி.என்.குப்பம் ராணிகாலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் வெண்மதி(வயது 17). இவர் கடந்த மாதம் 17-ந் தேதி வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடலில் காயம் இருந்தது.

இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், மரத்தில் உரசியதால் உடலில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஊர்காரர்கள் கூறினர். இதை உண்மை என்று நம்பிய ஆறுமுகம் குடும்பத்தினர், வெண்மதியின் உடலை தூக்கில் இருந்து இறக்கி அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண் மதியின் தங்கை லட்சுமி தோட்டத்துக்கு நடந்து சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் குடிபோதையில் கூச்சலிட்டு வந்ததை லட்சுமி தட்டிகேட்டார். அப்போது அந்த வாலிபர்கள், உன் அக்காவை கொலை செய்ததுபோல் உன்னையும் கொலை செய்து விடுவோம் என்று கூறி மிரட்டினர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமி, நடந்த சம்பவத்தை தனது தந்தை ஆறுமுகத்திடம் கூறினார். தூக்கில் தொங்கிய வெண்மதியின் உடலில் காயம் இருந்ததும், வாலிபர்களின் மிரட்டலும் அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து தனது மகளை அடித்துக் கொலை செய்து விட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடலூர் சப்-கலெக்டர் சரயூவிடம் ஆறுமுகம் மனு கொடுத்தார்.

இந்த மனுவை கடலூர் முதுநகர் போலீசாருக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்துமாறு சப்-கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் ராணிகாலனியை சேர்ந்த குப்புசாமி மகன்கள் பிரசாந்த் என்கிற சின்னவன், விஜயகாந்த், விவேகானந்தன், ராஜா மகன் இளையராஜா ஆகிய 4 பேர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை பிடித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பிடிபட்டுள்ள பிரசாந்த்துக்கு வெண்மதி உறவுமுறை பெண் என்பதால் அவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது காதலை வெண்மதி ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் பிரசாந்த், அவரை ஒருதலையாக காதலித்து வந்ததோடு, திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது.

இதற்கு மறுத்ததால் வெண்மதியை அடித்துக் கொலை செய்து விட்டு, உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் நாடகமாடி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கோணத்தில் 4 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் வெண்மதியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று(புதன்கிழமை) அல்லது நாளை(வியாழக்கிழமை) வெண்மதியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய திட்டமிட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story