திருவெண்ணெய்நல்லூர் அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தில் காமன் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, செட்டி தெரு, தேர்முட்டி தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வரவில்லை.
இதனால் பெரியசெவலை கிராம மக்கள், காலி குடங்களை தூக்கிக்கொண்டு வெகு தொலைவு நடந்தே வயல்வெளி பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் பலமுறை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று பகல் 12 மணியளவில் காலி குடங்களுடன் பெரியசெவலை மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அரசூர்- திருவெண்ணெய்நல்லூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிடவில்லை.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் பிரச்சினையை போக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் அனைவரும் பகல் 12.30 மணிக்கு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.
Related Tags :
Next Story