கஞ்சா வியாபாரிகள் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது


கஞ்சா வியாபாரிகள் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 31 July 2019 10:30 PM GMT (Updated: 31 July 2019 7:40 PM GMT)

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்தவர் இம்மானுவேல். இவருடைய மகன் ஜான்சன்ஜெபசிங்(வயது 47). லாரி டிரைவர். இவர் வெளியூர்களுக்கு செல்லும் போது கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தாராம். இதே போன்று குரும்பூரை சேர்ந்த ஜெரால்டு மகன் மரியான்(38) என்பவர் தூத்துக்குடி மற்றும் ஏரல் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்தாராம். இவர்கள் கடந்த வாரம் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் அவர்கள் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்ததால், ஜான்சன்ஜெபசிங், மரியான் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மதுரை ஜெயிலில் உள்ள ஜான்சன்ஜெபசிங், மரியான் ஆகிய 2 பேரிடம் நேற்று வழங்கினார்.

Next Story