ஆடி அமாவாசையையொட்டி வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


ஆடி அமாவாசையையொட்டி வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 31 July 2019 10:30 PM GMT (Updated: 31 July 2019 8:13 PM GMT)

ஆடி அமாவாசையையொட்டி வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, என் புகழுர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வாழைகள் பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளுர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கும், வியாபாரிகளுக்கும் விற்பனை செய்கின்றனர். சில வியாபாரிகள் வாழைத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்கின்றனர். வாழைத்தோட்டத்தில் விளையும் வாழைத்தார்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, கோவை நாமக்கல், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

ஆடி அமாவாசையொட்டி வாழைத்தார்கள் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் ஒரு பூவன் வாழைத்தார் ரூ.500-க்கு விற்றது தற்போது ரூ.750-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.400-க்கு விற்றது தற்போது ரூ.500-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கு விற்றது தற்போது ரூ.450-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.400-க்கு விற்றது தற்போது ரூ.500-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.600-க்கு விற்றது தற்போது ரூ.800-க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story