சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அனுப்ப முயன்ற பார்சலில் இருந்த துப்பாக்கியால் பரபரப்பு


சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அனுப்ப முயன்ற பார்சலில் இருந்த துப்பாக்கியால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 July 2019 11:00 PM GMT (Updated: 31 July 2019 10:34 PM GMT)

சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அனுப்ப முயன்ற பார்சலில் துப்பாக்கி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் அனுப்ப இருந்த பார்சல்களை விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் ‘ஸ்கேன்’ செய்தனர்.

அப்போது ஒரு பார்சலில் துப்பாக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த பார்சலை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த பார்சலை ஆய்வு செய்தபோது சென்னையை அடுத்த ஆலந்தூரில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஒருவருக்கு அந்த பார்சலை அனுப்பி இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து துப்பாக்கி பார்சலை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார், துப்பாக்கி பார்சலை அனுப்பிய கூரியர் நிறுவன அதிகாரியை அழைத்து விசாரித்தனர். அதில், பார்சலில் இருப்பது ஏர்கன் துப்பாக்கி எனவும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் டெல்லியில் இருந்து சண்டிகாருக்கு ரெயிலில் செல்ல வேண்டிய துப்பாக்கி, தவறுதலாக சென்னைக்கு வந்ததாகவும், எனவே அதை மீண்டும் டெல்லிக்கு விமானத்தில் அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.

ஆனாலும் துப்பாக்கியை விமானத்தில் பார்சலில் அனுப்புவது தவறு என்பதால் விமான நிறுவன அதிகாரிகளின் புகாரின் பேரில் துப்பாக்கி பார்சலை அனுப்பிய தனியார் கூரியர் நிறுவன அதிகாரியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியை ஆய்வுக்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு அறிக்கை வந்ததும் மேல் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story