சென்டாக் இணையதளம் முடங்கியது; மாணவ, மாணவிகள் அவதி


சென்டாக் இணையதளம் முடங்கியது; மாணவ, மாணவிகள் அவதி
x
தினத்தந்தி 31 July 2019 11:00 PM GMT (Updated: 31 July 2019 10:59 PM GMT)

சென்டாக் இணையதளம் முடங்கியதால் மாணவ, மாணவிகள் அவதியடைந்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவையில் நீட் தேர்வு இல்லாத பாடப்பிரிவுகளுக்கான சென்டாக் தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியானது. இந்தநிலையில் சென்டாக் இணையதளம் திடீரென முடங்கியுள்ளது. இதனால் தரவரிசை பட்டியலை பார்க்க முடியாமல் மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர்.

இதேபோல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு சென்டாக் மூலம் பணம் கட்டி சேர நாளை கடைசி நாள் என்பதால் அவர்களும் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக புகார்கள் தெரிவிக்க மகளிர் பாலிடெக்னிக் வளாகத்தில் செயல்படும் சென்டாக் அலுவலகத்தில் முறையிட பெற்றோர்களுடன் குவிந்தனர்.

அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து இணையதளத்தினை செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்கள். கலை மற்றும் அறிவியல் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்டாக் இணையதளத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்ய காலதாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Next Story