ஆம்பூரில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட திருமண மண்டபத்திற்கு ‘சீல்’


ஆம்பூரில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட திருமண மண்டபத்திற்கு ‘சீல்’
x
தினத்தந்தி 1 Aug 2019 11:00 PM GMT (Updated: 1 Aug 2019 3:27 PM GMT)

உரிய அனுமதி பெறாததால் ஆம்பூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

ஆம்பூர்,

வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்திற்கு ஆதரவு திரட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆம்பூரில் 2-வது கட்ட பிரசாரத்தை தொடங்கினார். காலையில் தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் ஆதரவு திரட்டினார். அதைத்தொடர்ந்து பஜார் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமியா பள்ளி வாசல்களின் முத்தவல்லிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசினார்.

இந்த கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், தாசில்தார் சுஜாதா ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெறவில்லை என தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெறாத காரணத்தாலும், கூட்டம் நடைபெறுவது குறித்து மண்டபத்தின் நிர்வாகி தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்காத காரணத்தால் தாசில்தார் சுஜாதா முன்னிலையில் வருவாய்த்துறையினர் திருமண மண்டபத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கிளம்பிய சற்று நேரத்தில் அதிகாரிகள் விரைந்து வந்து மண்டபத்திற்கு ‘சீல்’ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மு.க.ஸ்டாலின் நேற்று காலை ஆம்பூர் பஜார், பெரியாங்குப்பம், விண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் தோல் தொழிற்சாலை அதிபர்களை தொடர்புகொண்டு இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்கான முயற்சி செய்வது குறித்து தி.மு.க.வினருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து தி.மு.க. தலைவருடன் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து கிராம பகுதிகளில் நடைபெறுவதாக இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கவும், இஸ்லாமிய பள்ளி வாசல்களின் முத்தவல்லிகள், தோல் தொழிலதிபர்கள் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசவும் திட்டமிடப்பட்டது. அதன்படி தொழிலாளர்களிடமும், முத்தவல்லிகளிடமும் மு.க.ஸ்டாலின் பேசினார். இவ்வாறு திடீரென புதிதாக திட்டமிடப்பட்டதால் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது தெரியவந்தது.

தனியார் தோல் தொழிற்சாலை மற்றும் முத்தவல்லிகள் இடையே மு.க.ஸ்டாலின் பேசிய கூட்டங்களுக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. செய்தியாளர்கள் உள்ளே செல்ல முயன்ற போது தனியார் தொழிற்சாலை காவலாளிகள் மற்றும் மு.க.ஸ்டாலினின் தனி பாதுகாவலர்கள் தடுத்து வெளியே அனுப்பி தொழிற்சாலை மற்றும் தனியார் திருமண மண்டபத்தின் கதவுகளை இழுத்து பூட்டினர்.

Next Story