குழந்தை இல்லாத ஏக்கத்தில் தகராறு: கணவன்-மனைவி தற்கொலை பணகுடியில் பரிதாபம்


குழந்தை இல்லாத ஏக்கத்தில் தகராறு: கணவன்-மனைவி தற்கொலை பணகுடியில் பரிதாபம்
x
தினத்தந்தி 1 Aug 2019 9:30 PM GMT (Updated: 1 Aug 2019 6:31 PM GMT)

பணகுடியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதால் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

பணகுடி,

பணகுடியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதால் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கப்பல் ஊழியர்

நெல்லை மாவட்டம் பணகுடி போலீஸ் லைன் தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் கார்த்திகேயன் (வயது49). இவர் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தனலட்சுமி (40). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது.

இவர்களுக்கு குழந்தை இல்லை. பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்றும் தங்களுக்கு குழந்தை பிறக்காததால் கார்த்திகேயன் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு கப்பல் வேலையை விட்டு விட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

விஷம் குடித்தனர்

நாட்கள் செல்லச்செல்ல கார்த்திகேயன் அடிக்கடி மதுவை குடித்து விட்டு வந்தும் மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் மாலையிலும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த தனலட்சுமி, இதனால் கணவருடன் அடிக்கடி தகராறும் ஏற்படுகிறதே என மனமுடைந்தார். உடனே அவர் வீட்டில் இருந்த பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்த தென்னை மரத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துவிட்டார்.

இதில் பதறிப்போன கார்த்திகேயனும் அவரது கையில் இருந்த பாட்டிலை பிடுங்கி, விஷத்தை குடித்தார்.

ஆஸ்பத்திரியில் சாவு

சிறிது நேரத்தில் 2 பேரும் வீட்டுக்குள் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு ஏர்வாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று மாலையில் சிகிச்சை பலனின்றி 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று 2 பேருடைய உடலையும் கைப்பற்றி பரிசோதனைக்காக, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானக்கண் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி 2 பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story