சிறுபான்மை மாணவ-மாணவிகள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை,
மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மைய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2019-20-ம் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி உள்ளிட்ட மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல் 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை(ஐ.டி.ஐ., தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை மாணவ-மாணவிகளின் வங்கிக்கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.
பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ-மாணவிகள் வருகிற அக்டோபர் மாதம் 15-ந்தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் அக்டோபர் 31-ந்தேதி வரை www.sch-o-l-a-rs-h-ip.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மாணவ-மாணவிகள் அனைவரும் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ-மாணவிகளின் இணைய தள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. மேலும் இணையதளத்தில் வங்கிக்கணக்கு உள்ளிட்ட விவரங்களை கவனமுடன் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள், எந்த நிலையிலும் மாற்றவோ திருத்தவோ இயலாது.
கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சான்று ஆவணங்களுடன் பரிசீலித்து தகுதி பெற்ற விண்ணப்பங்களை உடனுக்குடன் சரிபார்த்து அனுப்ப வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story