விருத்தாசலம் அருகே துணிகரம், அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு


விருத்தாசலம் அருகே துணிகரம், அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Aug 2019 10:45 PM GMT (Updated: 1 Aug 2019 11:37 PM GMT)

விருத்தாசலம் அருகே அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர் களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விருத்தாசலம்,

விருத்தாசலத்தை அடுத்த ஆலடி அருகே உள்ள மணக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பார்வதி(வயது 55). இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், தூங்கிக்கொண்டிருந்த பார்வதியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். உடனே மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓட தொடங்கினர். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மர்மநபர்களை துரத்திச் சென்றனர். இருப்பினும் அவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு பார்வதி தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே வெளியூர் சென்றிருந்த அதே பகுதியை சேர்ந்த சிவகுரு(50), கமலக் கண்ணன்(35), ரவி மனைவி அஞ்சலாட்சி(40) ஆகியோர் தங்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது 3 பேரின் வீட்டு கதவுகளும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த 3 பேரும் தங்களது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்து துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் சிவகுரு பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தையும், கமலக் கண்ணன் வீட்டில் 4½ பவுன் நகையும், அஞ்சலாட்சி வீட்டில் ரூ.13 ஆயிரத்தையும் காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் பார்வதி கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆலடி போலீசார், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவகுரு, கமலக்கண்ணன், அஞ்சலாட்சி ஆகியோர் தங்களது வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 3 பேரின் வீட்டு கதவுகளையும் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் 3 பேர் வீடுகளில் இருந்த பீரோக்களை உடைத்து அதில் வைத்திருந்த நகை-பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அதனை தொடர்ந்து பார்வதி வீட்டின் உள்ளே புகுந்த அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த அவரின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

மேலும் விழுப்புரத்தில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீடுகளில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கை ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து சென்றனர். கொள்ளைபோன நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story