‘உயிரை பணயம் வைத்து திருட வந்த என்னை ஏமாற்றலாமா’ - மளிகை கடைக்காரருக்கு கடிதம் எழுதி அதிர்ச்சி தந்த கொள்ளையன்


‘உயிரை பணயம் வைத்து திருட வந்த என்னை ஏமாற்றலாமா’ - மளிகை கடைக்காரருக்கு கடிதம் எழுதி அதிர்ச்சி தந்த கொள்ளையன்
x
தினத்தந்தி 3 Aug 2019 12:00 AM GMT (Updated: 2 Aug 2019 5:52 PM GMT)

ஓட்டை பிரித்து இறங்கி வெறும் கையோடு திரும்பியதால், உயிரை பணயம் வைத்து திருட வந்த என்னை ஏமாற்றலாமா என்று மளிகை கடைக்காரருக்கு கொள்ளையன் ஒருவன் கடிதம் எழுதி வைத்து அதிர்ச்சி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர்,

தற்கொலை, கொலை செய்துகொள்பவர்கள், ஊரை விட்டு ஓடுபவர்கள் தங்களது முடிவுக்கான காரணங்கள் குறித்து கடிதங்கள் எழுதி வைத்து செல்வதை தான் நாம் இதுநாள் வரைக்கும் அறிந்து இருப்போம். இந்த கடிதங்களும் போலீசாரின் விசாரணைக்கு மிகவும் கைகொடுக்கும். அந்த வரிசையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் கொள்ளையன் ஒருவன், தான் கொள்ளையடிக்க சென்ற கடையின் உரிமையாளருக்கே கடிதம் எழுதி அதிர்ச்சி கொடுத்து இருக்கிறான்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் கடலூர் மெயின்ரோட்டில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் ஜெயராஜ் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அனைத்து பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டிருந்தது.

மேலும் அரிசி, மைதா, கடலை மாவு மூட்டைகளை பிளேடால் கிழித்து வாரி இறைக்கப்பட்டிருந்தன. அதோடு கடையின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கடையை பார்வையிட்டனர்.

அப்போது கடையில் உள்ள கல்லா பெட்டியில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

“உயிரை பணயம் வைத்து திருட வந்தால், காசு இல்லாமல் கல்லாவை துடைத்து வைத்து என்னை ஏமாற்றலாமா, அதுக்கு தான் இந்த குரங்கு வேலை” என எழுதப்பட்டிருந்தது.

இதன் மூலம் நேற்று முன்தினம் இரவு ஜெயராஜ் கடையை பூட்டி விட்டு சென்ற பின்னர், நள்ளிரவில் ஓட்டை பிரித்து கடைக்குள் கொள்ளையன் இறங்கி இருப்பது தெரியவந்தது. வழக்கமாக ஜெயராஜ் கடையில் வசூலாகும் பணத்தை எடுத்து சென்றுவிடுவார் என்பதால், கல்லாபெட்டியில் பணம் இல்லாமல் இருந்துள்ளது. இது கொள்ளையனுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தான் வெறும் கையோடு திரும்புவதை நினைத்து விரக் தியின் உச்சத்திற்கே சென்ற கொள்ளையன், கடை உரிமையாளருக்கு கடிதம் மூலம் தனது ஆதங் கத்தை வெளிப்படுத்தியுள்ளான். கடிதத்தில் குறிப்பிட்டதை போன்று குரங்கு வேலையாக, அங்கிருந்த அரிசி உள்ளிட்ட மூட்டைகளை பிளேடால் வெட்டி சென்று இருக்கிறான்.

இந்த நிலையில் கொள்ளையன் கடிதம் எழுதுவதற்கு பயன்படுத்திய மார்க்கரை அங்கேயே போட்டு சென்று இருந்தான். அதில் கைரேகை பதிவாகி இருக்கும் என்பதால் அதை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொள்ளையடிக்க வந்த நபர், கல்லாவில் பணம் ஏதும் இல்லாததால் கடிதம் எழுதிவைத்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story