ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கதிரவன் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 3 Aug 2019 10:45 PM GMT (Updated: 2 Aug 2019 8:25 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வியாபாரிகளின் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே வியாபாரத்தை தொடங்கும் வகையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வெடிபொருள் விதிகள் 2008-ன்படி தேவைப்படும் ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் ரூ.500 சேவை கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்யலாம். இந்த விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் சேவை மையங்களில் பதிவு செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ஒப்புகை சீட்டுடன், 6 வரைபடங்கள், 6 கிரைய பத்திர நகல்கள், ரூ.500 சேவை கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, முகவரிக்கான அடையாள அட்டை, சொத்துவரி செலுத்தியதற்கான ரசீது, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும். அதன்படி அதிகாரிகள் கொடுத்த பரிந்துரையின் பேரில் பரிசீலனை செய்யப்பட்டு விண்ணப்பம் ஏற்கப்பட்டால் தற்காலிக உரிமத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான ஆணையையும் இணையதளம் மூலமாகவே விண்ணப்பதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Next Story