‘குடிபோதையில் செக்ஸ் தொல்லை தந்ததால் உயிரோடு எரித்துக்கொன்றேன்’ - கணவரை கொலை செய்த பெண் பரபரப்பு வாக்குமூலம்


‘குடிபோதையில் செக்ஸ் தொல்லை தந்ததால் உயிரோடு எரித்துக்கொன்றேன்’ - கணவரை கொலை செய்த பெண் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 2 Aug 2019 11:30 PM GMT (Updated: 2 Aug 2019 8:26 PM GMT)

‘குடிபோதையில் செக்ஸ் தொல்லை தந்ததால் எனது காதல் கணவரை உயிரோடு எரித்துக் கொலை செய்தேன் என்று கைதான பெண் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தில்லையாடி வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது வளர்ப்பு மகன் சேதுபதி(வயது 24). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு பஞ்சர் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரும் அதேபகுதியை சேர்ந்த முருகவேணி(19) என்ற பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த மாதம் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து இருவரும் திண்டிவனத்தில் தில்லையாடி வள்ளியம்மை நகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு கூரை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் முருகவேணியின் தாய் குமுதா, அவரது தம்பி ஆகியோரும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை குமுதா தனது மகனுடன் வெளியே சென்று விட்டார். வீட்டில் சேதுபதி, முருகவேணி மட்டும் இருந்தனர்.

இந்தநிலையில் சேதுபதியின் வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது வீடு முற்றிலும் எரிந்த நிலையில் வெளிப்புறமாக பூட்டப்பட்டு கிடந்தது. உடனே போலீசார் வீட்டுக்குள் பார்த்தபோது உடல் கருகிய நிலையில் சேதுபதி பிணமாக கிடந்தார். முருகவேணியை காணவில்லை. இதையடுத்து சிறிது நேரத்தில் முருகவேணி வீட்டுக்கு வந்து, தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சேதுபதியை யாரோ? திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் வீட்டில் முருகவேணி இல்லாததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் முருகவேணியிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில் செக்ஸ் தொந்தரவு கொடுத்ததால் தூங்கிக் கொண்டிருந்த சேதுபதியை உயிரோடு வீட்டுடன் தீவைத்து எரித்துக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- எனக்கும் சேதுபதிக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தினந்தோறும் குடிபோதையில் வீட்டுக்கு வரும் சேதுபதி எனக்கு செக்ஸ் டார்ச்சர் செய்து வந்தார். மேலும் என் நடத்தை மீது சந்தேகப்பட்டு என்னையும், எனது குடும்பத்தினரையும் தகாத வார்த்தையால் திட்டி துன்புறுத்தி வந்தார்.

சம்பவத்தன்று எனக்கும் குடிபோதையில் இருந்த சேதுபதிக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் என்னை தீ வைத்து கொளுத்தி விடுவாயா? என கேட்டு தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் போதையில் படுத்து தூங்கி விட்டார். அப்போது நான் கூரை வீட்டின் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துவிட்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டேன். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்தபோது, எனது கணவர் உடல் கருகி இறந்து கிடந்தார். நான் கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில், சேதுபதி உயிரிழந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்து நாடகமாடினேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி நான் கொலை செய்ததை கண்டுபிடித்து என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். சேதுபதி, முருகவேணி இருவரும் காதலித்து கடந்த 21 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தனது ஆசை காதல் கணவர் தனக்கு தந்த செக்ஸ் தொல்லைகளால் வாழ்க்கையின் மீது வெறுப்பு அடைந்த முருகவேணிக்கு, அவருடனான வாழ்வு கசந்து போனதால் அவரை உயிரோடு தீ வைத்து எரித்து கொலை செய்யும் அளவுக்கு சென்று உள்ளார். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story