அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிட கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்


அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிட கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்
x
தினத்தந்தி 3 Aug 2019 11:00 PM GMT (Updated: 3 Aug 2019 5:44 PM GMT)

அரியலூர் மாவட்ட கொள்ளிட கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் திருமணமான பெண்கள் தாலி கயிற்றை மாற்றி புதிதாக அணிந்தனர்.

கீழப்பழுவூர்,

தமிழ் மாதங்களில் ஆடி 18-ம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். விவசாயத்திற்கு மூலக்காரணமாக இருக்கும் தண்ணீரை வழிபடுவது இதன் முக்கிய அம்சமாகும். ஆடி பட்டம் தேடி விதை என்ற கூற்றுக்கேற்ப விவசாயத்தை பெருக்க நீர் வளத்தை கொடுக்கும் ஆறு, குளம் ஆகியவற்றை தெய்வமாக நினைத்து அரிசியினால் ஆன பொருட்களை படைத்து நீர் வளத்தை கொடுக்கும் அவைகளை வணங்கும் பொருட்டு ஆடி 18-ம் நாளை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

மேலும் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் தமிழ்நாடு சுற்றுலா தலமான வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பு கொள்ளிடம் ஆறு செல்கிறது. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிவரும் கொள்ளிடம் ஆறு கோவிலின் முன்பு வரும்போது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓட ஆரம்பிக்கும். இது இந்த கோவிலுக்கான மிக சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இந்த கோவில் காசிக்கு அடுத்ததாகவும் போற்றப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆடிப்பெருக்கையொட்டி புதுக்கோட்டை, செம்பியக்குடி, குலமாணிக்கம், இலந்தைக்கூடம், கண்டிராதித்தம், அரண்மனைகுறிச்சி, பாளயபாடி, அண்ணிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர் உள்ளிட்ட இப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள் கொள்ளிடம் ஆற்றுப்பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கிற்கு இங்கு வரும் புதுமண தம்பதிகள் கொள்ளிடம் ஆற்றில் குளித்துவிட்டு மணலில் அமர்ந்து காப்பரிசி படையல் போட்டு, தேங்காய், பழம், வளையல், மஞ்சள்கயிறு உள்ளிட்ட பொருட்கள் வைத்து சாமி கும்பிட்டு, மனைவிமார்கள் கட்டியிருக்கும் தாலியை பிரித்து புது மஞ்சள் கயிற்றுடன் கோர்த்து கணவன்மார்கள் அவர்கள் கழுத்தில் மீண்டும் அதனை கட்டி விடுவார்கள். பின்பு படையல் போட்ட பொருட்களை ஆற்றில் வரும் நீரில் விடுவது வழக்கம். மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள சிறுவர்கள் மரத்தால் ஆனசிறிய தேரை செய்து அதில் சாமி படங்களை வைத்து வழிபட்டு அவர்களின் கிராமத்திலிருந்து நண்பர்களோடு சேர்ந்து தேரை இழுத்து வந்து இந்த கோவிலில் வழிபாடு செய்து தேரை ஆற்றில் வரும் நீரோடு விடுவர்.

ஆனால் இந்த ஆண்டு ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் வந்திருந்த பொதுமக்கள், புதுமண தம்பதிகள், சிறுவர்கள் ஆற்றில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தபோதிலும் புதுமண தம்பதிகள் மற்ற வழிபாடுகளை செய்து தாலியை பிரித்து கட்டிக்கொண்டனர். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நிலையை தவிர்க்க குளியல் தொட்டி ஒன்றை அமைத்துக்கொடுத்தால் வசதியாக இருக்கும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story