ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 3 Aug 2019 10:30 PM GMT (Updated: 3 Aug 2019 7:18 PM GMT)

ஆடிப்பெருக்கை யொட்டி பெரம்பலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர்,

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். மேலும் ஆடிப்பெருக்கு பண்டிகை ஆற்றங்கரைகளை ஓட்டி வாழும் மக்களே வெகுவிமரிசையாக கொண்டாடுவார்கள். பெரம்பலூர் மாவட்டம் வழியாக காவிரி ஆறு ஓடாததால் கோவில்களில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் புகழ்பெற்ற மதுரகாளியம்மன் கோவிலுக்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம், கூட்டமாக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். புதுமண தம்பதிகளும் வந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. பின்னர் உச்சிகால பூஜை நடைபெற்றது. இதில் பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பால்குட ஊர்வலம்

ஆடிப்பெருக்கையொட்டி பெரம்பலூர் துறைமங்கலம் 10-வது வார்டில் உள்ள மகா மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். துறைமங்கலம் ஏரிக்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடங்கள் சுமந்தும், அலகு குத்தியும், தீ சட்டி ஏந்தியும் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்கை யொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாட பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் திருச்சி காவிரி ஆற்றங்கரைக்கும் சென்றனர்.

இதேபோல் அரியலூர் தேச பத்துமாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கை யொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து தேச பத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

Next Story