கொல்லங்கோடு அருகே சகோதரர் வீட்டில் ஐஸ் வியாபாரி மர்ம சாவு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்


கொல்லங்கோடு அருகே சகோதரர் வீட்டில் ஐஸ் வியாபாரி மர்ம சாவு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 3 Aug 2019 11:00 PM GMT (Updated: 3 Aug 2019 8:03 PM GMT)

கொல்லங்கோடு அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஐஸ் வியாபாரி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே சங்குருட்டி, முல்லைசேரி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 52), ஐஸ் வியாபாரி. இவருடைய முதல் மனைவி இறந்து விட்டார். பின்னர் சிந்து என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தார். இதற்கிடையே சிந்துவும் கடந்த சில மாதங்களாக நோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

ரவிக்கு மது பழக்கம் உண்டு என தெரிகிறது. மது பழக்கத்தை கைவிடுவதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மேலும், கடந்த சில தினங்களாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று ரவி அருகில் உள்ள அவரது அண்ணன் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவியின் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனமுடைந்த நிலையில் இருந்த ரவி, சகோதரர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் ரவி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா? என்றும், இந்த மர்மசாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story