நெல்லை மேலப்பாளையத்தில் பரபரப்பு: கள்ளக்காதலனுடன் இருந்த தாயை அறையில் வைத்து பூட்டிய மாணவி-போலீசார் விசாரணை


நெல்லை மேலப்பாளையத்தில் பரபரப்பு: கள்ளக்காதலனுடன் இருந்த தாயை அறையில் வைத்து பூட்டிய மாணவி-போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Aug 2019 10:30 PM GMT (Updated: 5 Aug 2019 9:15 PM GMT)

நெல்லை மேலப்பாளையத்தில் கள்ளக்காதலனுடன் இருந்த தாயை அறையில் வைத்து மாணவி பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நெல்லை டவுனில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். அவருடைய கணவருக்கு 68 வயதாகிறது. அவர் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழவிளையை சேர்ந்த 29 வயது வாலிபர் இவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். இவர் ஆசிரியை தம்பியின் நண்பர் ஆவார். அப்போது அவருக்கும், ஆசிரியைக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இந்த ஆசிரியைக்கு 15 வயதில் 10-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். நேற்று முன்தினம் மாலை ஆசிரியையும், அந்த வாலிபரும் வீட்டின் ஒரு அறையில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தனர். கள்ளக்காதலனுடன் இருந்த தாயை அறைக்குள் வைத்து மகள் பூட்டினார். பின்னர் அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு திரண்ட உறவினர்கள் அறை கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு இருந்த அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அந்த வாலிபரை மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஆசிரியை, கள்ளக்காதலனுடன் தான் சேர்ந்து வாழப்போவதாக போலீசாரிடம் தெரிவித்தார். அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறினார். அந்த ஆசிரியையிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மேலும் பல திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். ‘எனது தாயாருக்கும், எனது கணவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அதன் காரணமாக என்னை அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். எனது கணவருடன் வாழ விருப்பம் இல்லை. அந்த வாலிபருடன் 10 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வருகிறேன்‘ என்றார்.

அந்த வாலிபர் மீது யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. அதனால் அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த ஆசிரியை கூறுகையில், ‘நான் வீட்டுக்கு சென்றால் என்னை உறவினர்கள் கொலை செய்து விடுவார்கள். அதனால் நான் வீட்டுக்கு செல்லவில்லை‘ என்றார். இதையடுத்து அவரை போலீசார் நெல்லையில் உள்ள மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர். 15 வயது மகளை மேலப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story