காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு


காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 5 Aug 2019 11:15 PM GMT (Updated: 5 Aug 2019 10:04 PM GMT)

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட் டதை தொடர்ந்து கோவை விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்களில் வன்முறை ஏற்படாமல் இருக்க அனைத்து மாநில போலீசாரும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கூறியுள்ளார்.

இது குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா கூறியதாவது:-

கோவை, நீலகிரி உள்பட மேற்கு மண்டல மாவட்டங்க ளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பஸ்நிலையம், ரெயில்நிலையம், விமானநிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை விமான நிலைய இயக்குனர் மகாலிங்கம் கூறியதாவது:-

கோவை விமானநிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மூலம் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளுக்கோ, பயணிகளை வரவேற்க வரும் பொதுமக்களுக்கோ கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. வழக்கமாக சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

இப்போது முதல் சுதந்திர தினம்வரை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். கோவை விமானநிலையங்களுக்கு வரும் வாகனங்கிலும் சோதனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை போத்தனூர், ஆர்.எஸ்.புரம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளதாக தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story