கொடைக்கானல் அருகே, யானைகளை விரட்ட துப்பாக்கியுடன் காத்திருக்கும் விவசாயிகள்


கொடைக்கானல் அருகே, யானைகளை விரட்ட துப்பாக்கியுடன் காத்திருக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 6 Aug 2019 11:15 PM GMT (Updated: 6 Aug 2019 6:03 PM GMT)

கொடைக்கானல் அருகே காட்டுயானைகளை விரட்ட துப்பாக்கியுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் தாலுகா அஞ்சூரான்மந்தை, பாரதி புரம் அண்ணாநகர், புலியூர், கணேசபுரம், பேத்துப்பாறை உள்பட பல்வேறு பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. இவை அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், விவசாயிகளையும் தாக்கி வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பேத்துப்பாறை பகுதியில் உள்ள அசோகன் என்பவரது தோட்டத்தில் நுழைந்த காட்டுயானைகள் வேலியை உடைத்து உள்ளே சென்று அங்கு பயிரிடப்பட்டிருந்த அவரை பயிர்களையும் சேதப்படுத்தி சென்றன. பின்னர் அவை அப்பகுதியில் காட்டுக்குள் முகாமிட்டுள்ளன.

இதனையடுத்து நேற்று காலை தோட்டத்தின் உரிமையாளர் அசோகன் தோட்டத்தில் வந்து பார்வையிட்டார். இதனையடுத்து காட்டுயானைகள் மீண்டும் தோட்டத்துக்குள் புகாமல் தடுக்க துப்பாக்கியுடன் விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதிகளில் முகாமிட்டு இருக்கும் யானைகளை நிரந்தரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story