நில உரிமையாளர்கள் என்ற பெயரில் வந்தது: கரூர் கோர்ட்டுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை


நில உரிமையாளர்கள் என்ற பெயரில் வந்தது: கரூர் கோர்ட்டுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 6 Aug 2019 11:00 PM GMT (Updated: 6 Aug 2019 7:39 PM GMT)

நில உரிமையாளர்கள் என்ற பெயரில் கரூர் கோர்ட்டுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை மெயின் ரோட்டில் கலெக்டர் அலுவலகத்தை ஒட்டியவாறே ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளது. இங்கு மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டு, ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 1, 2 கோர்ட்டுகள், மகிளா கோர்ட்டு உள்ளிட்ட கோர்ட்டுகள் செயல்படுகின்றன. வழக்கு விசாரணை, வழக்கு தாக்கல் செய்வது உள்ளிட்டவற்றுக்காக தினமும் பலர் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கரூர் கோர்ட்டு அலுவலகத்திற்கு தபாலில் ஒரு கடிதம் வந்தது. அதனை பிரித்து பார்த்த போது, அதில் “கரூர் கோர்ட்டு வளாகத்தில் 5, 6-ந்தேதிகளில் வெடிகுண்டு வெடிக்கும். பிளாஸ்டிக் வெடிகுண்டாக இருப்பதால் அது சிக்காது. இப்படிக்கு நில உரிமையாளர்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பெயர் விவரம் குறிப்பிடப்படாமல், கையெழுத்து கிறுக்கலாக எழுதப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் கடிதத்தினால் கரூர் கோர்ட்டில் பரபரப்பான சூழல் நிலவிய வேளையில், மர்ம நபர் ஒருவர் கோர்ட்டு அலுவலகத்தினை போனில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உடனடியாக இணைப்பை துண்டித்து விட்டார்.

இது தொடர்பாக கரூர் கோர்ட்டு நிர்வாகம் சார்பில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் மாலையில் தாந்தோன்றிமலை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் கரூர் கோர்ட்டு வளாகத்தில் வெடிகுண்டு ஏதும் உள்ளதா? என தீவிர சோதனை மேற்கொண்டனர். எனினும் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று காலையிலும், கரூர் கோர்ட்டின் பிரதான நுழைவு வாயில் முன்பு மெட்டல் டிடெக்டர் கருவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோர்ட்டுக்கு வந்த வக்கீல்கள், பொதுமக்கள், ஊழியர்கள் என அனைவரையும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். மோட்டார் சைக்கிள், மொபட் உள்ளிட்ட இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை சோதனை செய்த பிறகு, அவர்களது வாகன பதிவெண் தனியாக குறித்து வைக்கப்பட்டது. மேலும் கூரியர், தபால் உள்ளிட்டவை எடுத்து வந்தவர்களிடம் விசாரித்த பிறகு, அவர்களது செல்போன் நம்பரை போலீசார் வாங்கி வைத்து விசாரித்தனர். இதற்கிடையே மோப்பநாய் உதவியுடன் கார் உள்ளிட்டவற்றில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஏதேனும் உள்ளதா என துப்பறிந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையால் கரூர் கோாட்டில் பரபரப்பான சூழல் நிலவியது.

கரூர் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை எழுதியது யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கோர்ட்டுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story