புதுக்கோட்டையில் அரிவாளால் தாக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு கொலை வழக்கில் நண்பர் கைது


புதுக்கோட்டையில் அரிவாளால் தாக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு கொலை வழக்கில் நண்பர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2019 11:15 PM GMT (Updated: 6 Aug 2019 7:46 PM GMT)

புதுக்கோட்டையில் அரிவாளால் தாக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிந்து அவரது நண்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50). கூலி தொழிலாளியான இவரும், புதுக்கோட்டை அருகே உள்ள இம்மனாம்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் சுந்தரம் (35) என்பவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. சுந்தரம் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி ரவி புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுந்தரத்திற்கும், ரவிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

பின்னர் வாய்த்தகராறு முற்றி இருவரும் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த சுந்தரம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளின் பின்பகுதியால் ரவியை பயங்கரமாக தாக்கினார். இதில் ரவி படுகாயமடைந்தார். மேலும் சுந்தரத்திற்கும் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்த வீடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்த ரவி மற்றும் காயமடைந்த சுந்தரம் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவியை கொலை செய்ததாக சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story