திருவள்ளூர் அருகே பெண்ணிடம் தகராறு செய்தவரை தட்டி கேட்டதால் கோஷ்டி மோதல் 8 பேர் மீது வழக்கு


திருவள்ளூர் அருகே பெண்ணிடம் தகராறு செய்தவரை தட்டி கேட்டதால் கோஷ்டி மோதல் 8 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Aug 2019 10:15 PM GMT (Updated: 6 Aug 2019 8:42 PM GMT)

திருவள்ளூர் அருகே பெண்ணிடம் தகராறு செய்தவரை தட்டி கேட்டதால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள வேப்பஞ்செட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 28). இவரது உறவினரான சித்ரா நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த அதே கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம், சித்ராவின் தலைமுடியை பிடித்து இழுத்துள்ளார். இதை ஜானகிராமன் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த திருவேங்கடம் தனது நண்பர்களான சிவக்குமார், மோகன் ஆகியோருடன் சேர்ந்து ஜானகிராமனை தாக்கியுள்ளனர்.

பதிலுக்கு ஜானகிராமன் தரப்பில் புருஷோத்தமன், சண்முகம், வள்ளிம்மாள், சித்ரா உள்பட 5 பேர் திருவேங்கடத்தையும், அவரது மனைவி கோமதியையும் தகாத வார்த்தையால் பேசி தாங்கள் வைத்திருந்த கத்தியால் இருவரையும் குத்தியுள்ளனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பையும் சேர்ந்த மேற்கண்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த ஒதிக்காட்டை சேர்ந்தவர் மேசாக் (47). இவர் நேற்று முன்தினம் ஒதிக்காடு பகுதியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்கிற ராஜமணிகண்டன், ஆதி, பெனிடோ ஆகியோர் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு மேசாக்கை தகாத வார்த்தையால் பேசி அடித்து உதைத்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து மேசாக் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மேற்கண்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story