நெய்வேலி அருகே, தலையில் கல்லை போட்டு விவசாயி கொலை - தந்தை வெறிச்செயல்


நெய்வேலி அருகே, தலையில் கல்லை போட்டு விவசாயி கொலை - தந்தை வெறிச்செயல்
x
தினத்தந்தி 6 Aug 2019 11:00 PM GMT (Updated: 6 Aug 2019 10:43 PM GMT)

நெய்வேலி அருகே சொத்தை பிரித்து கேட்டு தகராறு செய்ததால் தலையில் கல்லை போட்டு விவசாயியை அவரது தந்தையே கொலை செய்தார்.

நெய்வேலி,

நெய்வேலி அருகே உள்ள பெரியகாப்பான்குளத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 61). இவருக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகன் சிவக்குமார்(37). விவசாயி. இவருக்கும், கச்சிராயநத்தத்தை சேர்ந்த சீதா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கீதா(6), கீர்த்தனா(4) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக சிவக்குமார், சொத்தை பிரித்து தருமாறு தனது தந்தை பரமசிவத்திடம் கேட்டு வந்தார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சிவக்குமாரை சீதா கண்டித்தார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்ட சீதா, தனது 2-வது மகள் கீர்த்தனாவுடன் கச்சிராயநத்தத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவக்குமார், தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறும், பணம் தருமாறும் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பரமசிவம், அவரை நெட்டி தள்ளினார். இதில் நிலைதடுமாறி சிவக்குமார் கீழே விழுந்தார். உடனே பரமசிவம், அருகில் கிடந்த கல்லை தூக்கி அவரது தலையில் போட்டார். இதில் தலைநசுங்கி சிவக்குமார் இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை தேடி வந்தனர். இதனிடையே பெரியகாப்பான்குளம் கிராம நிர்வாக அலுவலர் அன்புமணியிடம் சரணடைந்த பரமசிவம், தனது மகனை கொலை செய்து விட்டதாக கூறினார். இதையடுத்து பரமசிவம், நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story