கால்நடை வளர்ப்போர் பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்


கால்நடை வளர்ப்போர் பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 7 Aug 2019 11:00 PM GMT (Updated: 7 Aug 2019 7:08 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் மாநில பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கறவை மாடுகளின் உற்பத்தி திறன் மற்றும் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், மாநில பசுந்தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, இறவை சாகுபடியில் 100 சதவீத அரசு மானியத்தில் நிலையான பசுந்தீவன உற்பத்தி செய்யும் வகையில் கோ 4, கோ 5 தீவன புல்கரணைகள் 4 சென்ட், மறுதாம்பு தீவன சோளம் 2 சென்ட், ஆப்பிரிக்கன் நெட்டை மக்காச்சோளம் 1 சென்ட், தீவன தட்டைப் பயிறு 1.5 சென்ட் மற்றும் வேலிமசால் 1.5 சென்ட் ஆக கூடுதலாக 10 சென்ட் நிலப் பரப்பில் சாகுபடி செய்ய ரூ.550 மதிப்பிலான தீவன விதைகள் வழங்கப்படும்.

100 சதவீத மானியம்

ஒரு பயனாளி குறைந்தபட்சம் 10 சென்ட் நிலப்பரப்பிலும், அதிகபட்சமாக 1 ஏக்கர் நிலப்பரப்பிலும் சாகுபடி செய்யலாம். இத்திட்டத்தின்கீழ், 200 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பாசன வசதி இல்லாத விவசாயிகளுக்கு, மானாவாரியில் தீவனப்புல் உற்பத்திக்காக, 0.25 ஏக்கர் நிலப்பரப்பிற்கு 3 கிலோ தீவனச்சோளம் மற்றும் 1 கிலோ தட்டைப்பயிறு விதைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இத்திட்டத்தில் ஒரு பயனாளி குறைந்தபட்சம் 0.25 ஏக்கரிலும், அதிகபட்சமாக 2 ஏக்கர் நிலப்பரப்பிலும் சாகுபடி செய்யலாம். இத்திட்டத்தின்கீழ், 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் மானியம்

மேலும், விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள், சிறு, குறு விவசாயிகள், ஆவின் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப் படும். இனம் வாரியாக 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, மேற்காணும் திட்டங்களின் மூலம் பயன்பெற விருப்பம் உள்ள, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு உள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு, பயன்பெற விருப்பம் உள்ள திட்டங்களை குறிப்பிட்டு, எழுத்து மூலமாக விண்ணப்பம் அளித்து, தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்துள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே மானியம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story