விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்காததால் அரசுபஸ் ஜப்தி நாமக்கல்லில் பரபரப்பு


விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்காததால் அரசுபஸ் ஜப்தி நாமக்கல்லில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Aug 2019 10:45 PM GMT (Updated: 7 Aug 2019 9:21 PM GMT)

விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்காததால் அரசுபஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் நேற்று நாமக்கல் பஸ்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல்,

சேலம் மாவட்டம் சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சேகர். பெயிண்டர். இவரது மனைவி அம்பிகா (வயது40). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி உறவினர் நீதி என்பவருடன் மொபட்டில் ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது பின்னால் வந்த சேலம் கோட்டத்துக்கு சொந்தமான அரசுபஸ் ஒன்று இவர்களது மொபட் மீது மோதியது. இதில் அம்பிகா படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அவர் வக்கீல் செந்தில்குமார் மூலம் இழப்பீடு வழங்கக்கோரி நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி அரசு போக்குவரத்து கழகம் அம்பிகாவுக்கு ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீட்டு தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அம்பிகா சார்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தற்போதைய நீதிபதி லதா, சேலம் கோட்டத்துக்கு சொந்தமான அரசுபஸ் ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று நாமக்கல் பஸ்நிலையத்தில் இருந்து ராசிபுரம் புறப்பட்ட அரசுபஸ் கோர்ட்டு அமீனா ரவிச்சந்திரன் முன்னிலையில் ஜப்தி செய்யப்பட்டது. இந்த சம்பவம் பஸ்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story