மனைவி, தாய் இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை: மகனை பார்த்துக்கொள்ளும்படி போனில் நண்பரிடம் கூறிவிட்டு தூக்கில் தொங்கினார்


மனைவி, தாய் இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை: மகனை பார்த்துக்கொள்ளும்படி போனில் நண்பரிடம் கூறிவிட்டு தூக்கில் தொங்கினார்
x
தினத்தந்தி 8 Aug 2019 9:30 PM GMT (Updated: 8 Aug 2019 6:51 PM GMT)

மனைவி மற்றும் தாய் இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தனது நண்பருக்கு போன் செய்து, தனது மகனை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி கூறினார்.

பூந்தமல்லி,

மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவேக்(வயது 35). சொந்தமாக நிறுவனம் நடத்தி வந்தார். புற்றுநோய் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மனைவி இறந்துவிட்டார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருடைய தாய் ராணியும் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால் விவேக், தனது 6 வயது மகன் சாய்சரத்துடன் தனிமையில் தவித்தார்.

தனது மனைவி மற்றும் தாய் இறந்துவிட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த விவேக் மற்றும் அவருடைய மகனை ஆறுதலுக்காக அவரது நண்பரான சத்தியசாய்பாபு என்பவர் ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்து இருந்தார்.

நேற்று முன்தினம் வாடகைக்கு இருக்கும் வீட்டை காலி செய்துவிட்டு வருவதாக கூறிவிட்டு தனது வீட்டுக்கு சென்ற விவேக் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் அவர், மும்பையில் உள்ள தனது மற்றொரு நண்பருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர், “எனது மகனை நல்லபடியாக பார்த்து கொள்ளவேண்டும். அவனை நன்றாக படிக்க வையுங்கள். நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சத்தியசாய்பாபுவுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர், அங்கு சென்றுபார்த்த போது, வீட்டின் உள்ளே விவேக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மதுரவாயல் போலீசார், விவேக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story