ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் பூதலூர் பகுதியில் 4,635 ஏக்கர் குறுவை சாகுபடி


ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் பூதலூர் பகுதியில் 4,635 ஏக்கர் குறுவை சாகுபடி
x
தினத்தந்தி 8 Aug 2019 10:45 PM GMT (Updated: 8 Aug 2019 7:09 PM GMT)

பூதலூர் பகுதியில் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் 4,635 ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ள வசதியாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து 8-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால் குறுவை சாகுபடியை முழு அளவில் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் ஆழ்துளை கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் பலரும் தங்கள் வயல்களில் குறுவை சாகுபடியை மேற்கொண்டு வருகிறார்கள்.

கல்லணையின் தலைப்பு பகுதியில் உள்ள பூதலூர் தாலுகாவில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு ஆகிய ஆறுகளின் படுகை பகுதிகளில் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பூதலூர் தாலுகா பகுதியில் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் 4,635 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாக வேளாண்மை அதிகாரிகள் கூறுகிறார்கள். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஆழ்துளை கிணறு மூலம் குறுவை சாகுபடி செய்து வருகிறோம். நடவு பணிகள் நிறைவடைந்து தற்போது 3-ம் களை எடுப்பு நடைபெற்று வருகிறது.

நடவு செய்யப்பட்ட குறுவை பயிர்களில் களைகள் அதிகம் இருப்பதால் களை எடுக்க கூடுதல் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். கூலி செலவும் அதிகரித்து உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக பயிர்கள் நல்ல நிலையில் உள்ளனர். இதே நிலை நீடித்தால் மகசூல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story