புயல் தாக்கி 10 மாதங்களாகியும் நிவாரணம் கிடைக்கவில்லை தென்னை விவசாயிகள் வேதனை


புயல் தாக்கி 10 மாதங்களாகியும் நிவாரணம் கிடைக்கவில்லை தென்னை விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 8 Aug 2019 10:45 PM GMT (Updated: 8 Aug 2019 7:19 PM GMT)

புயல் தாக்கி 10 மாதங்களாகியும் நிவாரணம் கிடைக்கவில்லை என தென்னை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களை கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் 15-ந் தேதி கஜா புயல் தாக்கியது. தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் புயலின் கோர தாண்டவத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்த பகுதியை சேர்ந்த மக்களின் முக்கிய வாழ்வாதாரமான தென்னை மரங்கள் புயலில் விழுந்து, விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டது. பல ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன. மீனவர்களின் வாழ்வாதாரமாகிய 300-க்கும் மேற்பட்ட படகுகளை புயல் சுக்கு நூறாக்கியது. புயலில் விழுந்த தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1,100 நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி விவசாயிகள் பலருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் புயல் தாக்கி 10 மாதங்களாகியும் நிவாரணம் கிடைக்கவில்லை என தென்னை விவசாயிகள் பலர் வேதனை தெரிவித்து வருகிறார்கள். இந்த பகுதியில் புயலில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகள் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான சேதுபாவாசத்திரம் பகுதியில் ஏராளமான தென்னை மரங்களை விவசாயிகள் இழந்துள்ளனர். புயலில் விழுந்த தென்னை மரங்கள் எத்தனை? எவ்வளவு நிவாரணம் வழங்க வேண்டும்? என்பது பற்றி அரசு முறையான கணக்கெடுப்பை மேற்கொள்ளவில்லை.

நிவாரணமும் பாரபட்சமாகவே வழங்கப்பட்டது. 10 மாதங்களாகியும் பலருக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. புயல் நிவாரணத்துக்கு அரசு நிதி ஒதுக்கியபோதும், அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. நிவாரணம் கிடைக்காததால் புயலில் விழுந்த மரங்களை அகற்ற முடியாமலும், புதிதாக தென்னங்கன்றுகளை நட முடியாமலும் சிரமத்தில் இருக்கிறோம்.

இந்த பகுதியில் வறட்சி காலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர். ஆனால் புயல் நேரத்தில் வியாபாரிகள் வரவில்லை. பொருளாதார வசதி உள்ளவர்கள் தங்கள் சொந்த செலவில் புயலில் விழுந்த மரங்களை மொத்தமாக அப்புறப்படுத்தி விட்டனர். ஆனால் வசதி இல்லாதவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக மரத்தை அப்புறப்படுத்தி வருகிறோம். இந்த பணிகள் இன்னமும் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story