விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை: கைதான 4 பேர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்


விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை: கைதான 4 பேர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 8 Aug 2019 10:15 PM GMT (Updated: 8 Aug 2019 8:56 PM GMT)

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 2 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே பறக்கை மாவிளை காலனியை சேர்ந்தவர் புஷ்பாகரன் (வயது 40). இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணை அமைப்பாளராக பதவி வகித்தார். சம்பவத்தன்று 5 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக கிஷோர்குமார், மாதேஷ், கண்ணன், சஞ்சய்குமார், சஜன் ஆல்பர்ட் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள பிரசன்னாவை தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் குளத்தூரை சேர்ந்த சஜித் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை கோர்ட்டில் ஆஜர்

இதற்கிடையே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் கிஷோர்குமார், மாதேஷ், கண்ணன், சஞ்சய்குமார், சஜன் ஆல்பர்ட் ஆகிய 4 பேரையும் நெல்லைக்கு அழைத்து சென்று நெல்லை 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி அவர்கள் 4 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு

மேலும் கொலை செய்யப்பட்ட புஷ்பாகரனின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். புஷ்பாகரனின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டம் நடத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே, புஷ்பாகரனின் குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிதியாக ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500 வழங்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து உறவினர்களிடம் புஷ்பாகரனின் உடல் 2 நாட்களுக்கு பின்பு நேற்று மதியம் ஒப்படைக்கப்பட்டது.

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இருந்து புஷ்பாகரனின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுசூதனபுரம் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Next Story