பள்ளிக்கு செல்லும் பாதை அடைப்பு: உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று பாடம் படித்த பள்ளிக்குழந்தைகள்


பள்ளிக்கு செல்லும் பாதை அடைப்பு: உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று பாடம் படித்த பள்ளிக்குழந்தைகள்
x
தினத்தந்தி 8 Aug 2019 11:00 PM GMT (Updated: 8 Aug 2019 9:11 PM GMT)

பள்ளிக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் செல்ல வழியில்லாமல் பள்ளிக்குழந்தைகள் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தரையில் உட்கார்ந்து பாடம் படித்தனர்.

சங்ககிரி,

சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகப்பட்டி ஊராட்சி தாதவராயன்குட்டை அருந்ததியர் தெருவில் சுமார் 80 ஆண்டு காலமாக 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் விவசாய கூலி தொழிலாளர்கள். இந்த பகுதியை சேர்ந்த பள்ளி குழந்தைகள் அருகில் காஞ்சாபுதூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று பாடம் படித்து வருகிறார்கள். பள்ளிக்கு செல்லும் போது தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாக சென்று வந்தனர். இந்த பாதையை பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

அந்த வழியாக காஞ்சாபுதுார் அரசு தொடக்கப்பள்ளிக்கு மாணவ- மாணவிகள் செல்வது, பொதுமக்கள் ரேஷன்கடைக்கு செல்லுதல், வெளியூர் செல்லவும் அந்த பாதையை பயன்படுத்தி வந்தனர். வேறு வழி தடத்தில் சென்றால் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பள்ளி மற்றும் ரேஷன்கடை செல்ல வேண்டிய நிலையில் இருந்து வருகிறார்கள்.

பாதை அடைப்பு

இந்தநிலையில் நேற்று முன்தினம் தனியாருக்கு சொந்தமான பாதையின் குறுக்கே திடீரென பொக்லைன் எந்திரத்தை கொண்டு குழி தோண்டி மண்ணைகொட்டி பாதையை அடைத்து வி்ட்டனர். இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. பொதுமக்களும் வேலை மற்றும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் சீருடை, பாட புத்தக பையுடன் சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு இதுதொடர்பாக மனு கொடுக்க வந்தனர். அங்கு பொதுமக்கள் மனு எழுதிகொண்டு இருந்தனர். அலுவலக நுழைவு வாயில் பாதையில் வரிசையாக உட்கார்ந்து பாடபுத்தகத்தை எடுத்து மாணவ, மாணவிகள் படிக்க தொடங்கினார்கள். இதைஅறிந்த சங்ககிரி உதவி கலெக்டர் அமிர்தலிங்கம், குழந்தைகள் அமர்ந்து இருந்த இடத்திற்கு வந்தார். குழந்தைகளை ஏன் பள்ளிக்கு அனுப்பாமல் இங்கு அழைத்து வந்தீர்கள்? என்று பொற்றோர்களிடம் கேட்டார். அதற்கு பொதுமக்கள் பள்ளி செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. வேறு பாதை வழியாக 6 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. அதனால் நாங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என்று கூறினார்கள்.

பேச்சுவார்த்தை

பிறகு பொதுமக்கள் சங்ககிரி உதவி கலெக்டர் அமிர்தலிங்கத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவை பெற்று கொண்ட உதவி கலெக்டர் அமிர்தலிங்கம், சங்ககிரி தாசில்தார் அருள்குமார் மற்றும் வருவாய் அதிகாரிகளை உடன் அழைத்து கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

தனியார் பாதை செல்லும் விவசாய நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் அந்த வழியாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அனுமதி அளித்தனர். ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு நிரந்தரமாக பொது பாதை அரசு புறம்போக்கு நிலத்தில் அமைத்து கொடுக்க வேண்டும், என்றனர். அதனை உடனடியாக அளவீடு செய்ய வருவாய் ஆய்வாளர், சர்வேயர், கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் வருவாய்துறை அதிகாரிகள் அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்ய ஆய்வு மேற்கொண்டனர். அதனால் பொதுமக்களின் பாதை பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இதன் காரணமாக நேற்று அந்த பள்ளிக்கூடத்துக்கு பெரும்பாலான மாணவ, மாணவிகள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story