சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்


சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 8 Aug 2019 10:30 PM GMT (Updated: 8 Aug 2019 9:16 PM GMT)

சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்,

சேலம் மாநகரில் கோட்டை மாரியம்மன், குகை மாரியம்மன், காளியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடிப்பண்டிகை கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்கள் கோவில்களில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இதில் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல், சக்தி அழைத்தல், கொடியேற்றம், பொங்கல் வைபவம், தீ மிதித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதற்கு முன்பு ஆடித்திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெற்றது இல்லை. ஆனால் இந்தாண்டு முதன்முதலாக செங்குந்தர் மாரியம்மன் தேர் திருப்பணி அறக்கட்டளை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் 27 அடி உயரத்தில் புதிதாக மரத்திலான தேர் செய்யப்பட்டு இருந்தது.

சிறுவர்கள் கோலாட்டம்

இதையொட்டி நேற்று காலை கோவில் அருகே தேர் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கவசத்தில் செங்குந்தர் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதையடுத்து கோவில் அருகே புறப்பட்ட தேரானது, திரு.விக சாலை, மாரிமுத்து முதலி தெரு, தங்க செங்கோடன் தெரு, செங்குந்தர் மேட்டு தெரு, அண்ணாமலை முதலி தெரு, செங்குந்தர் மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.தேருக்கு முன்பாக சிறுவர்கள் கோலாட்டம் ஆடியவாறு சென்றனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னதாக மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.

கோட்டை மாரியம்மன் கோவில்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று திரளான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். இதையொட்டி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. சேலம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்றும் கோவிலில் பொங்கல், மாவிளக்கு பிரார்த்தனை செலுத்துதல் நிகழ்ச்சியும், வருகிற 13-ந் தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 

Next Story