கிருஷ்ணராயபுரம் பகுதியில் பலத்த மழை: அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு


கிருஷ்ணராயபுரம் பகுதியில் பலத்த மழை: அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு
x
தினத்தந்தி 9 Aug 2019 10:45 PM GMT (Updated: 9 Aug 2019 8:43 PM GMT)

கிருஷ்ணராயபுரம் பகுதியில் பலத்த மழையால் அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் விவசாயி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணராயபுரம், 

கரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்கள் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கரூர் அமராவதி, காவிரி ஆறுகளில் நீர்வரத்தின்றி மணற்பாங்காக காட்சியளிக்கிறது. இதனால் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு நிலவியதோடு, விவசாய பணிகளும் தண்ணீரின்றி பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதலே கிருஷ்ணராயபுரம் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை யிலிருந்து இரவு வரை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இந்தநிலையில் கிருஷ்ண ராயபுரம் அருகே உள்ள குச்சிபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 55). விவசாயியான, இவர் நேற்று காலை கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மஞ்சள் மேடு பகுதியில் உள்ள ஒரு வாழைத் தோட்டத்திற்கு வேலைக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பலத்த காற்றால் அறுந்து தொங்கி கொண் டிருந்த மின்கம்பி பழனிச்சாமி மீது உரசியதாக கூறப்படு கிறது. இதில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story