அ.தி.மு.க.-அ.ம.மு.க. விரைவில் இணையும் தஞ்சையில், சி.ஆர்.சரஸ்வதி பேச்சு


அ.தி.மு.க.-அ.ம.மு.க. விரைவில் இணையும் தஞ்சையில், சி.ஆர்.சரஸ்வதி பேச்சு
x
தினத்தந்தி 10 Aug 2019 11:15 PM GMT (Updated: 10 Aug 2019 7:17 PM GMT)

அ.தி.மு.க.-அ.ம.மு.க. விரைவில் இணையும் என தஞ்சையில் சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகர், வடக்கு, தெற்கு, நாகை வடக்கு, தெற்கு, திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் அ.ம.மு.க. தலைமை கழக பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாம் தஞ்சையில் நேற்று நடந்தது. இந்த பயிற்சி முகாமிற்கு அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி தலைமை தாங்கி பேசினார்.

இதில் துணை பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி, தலைமை கழக பேச்சாளர் நடிகர் ரஞ்சித், மகளிரணி செயலாளர் வளர்மதி ஜெபராஜ், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் டேவிட் அண்ணாதுரை, இலக்கிய அணி செயலாளர் துரை, செய்தி தொடர்பாளர் ஜெமிலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

என்றைக்கும் கைவிடாது

பயிற்சி முகாமில் கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி பேசியதாவது:-

ஆளும் கட்சிக்கு சென்றால் பணம் கிடைக்கும். ஆனால் மனசாட்சியை விற்க வேண்டும். மனசாட்சியை விற்று, துரோகம் செய்வதைவிட தியாகம் செய்யக்கூடிய இடத்திற்கு சென்றால் எதிர்காலம் நன்றாக அமையும் என்று நம்பிக்கையுடன் வந்து இருக்கிறீர்கள். அ.ம.மு.க. உங்களை என்றைக்கும் கைவிடாது.

கட்சி கொள்கையை மக்களிடம் எடுத்து சொல்ல நிரந்தர சின்னம் நமக்கு தேவை. நமக்கு நிரந்தர சின்னம் வந்த பிறகு தெருமுனை கூட்டம் நடத்தப்படும். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சசிகலாவுக்கு துரோகம் செய்து விட்டனர். துரோகம் என்றைக்கும் நிலைக்காது. தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக அ.ம.மு.க. திகழ்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம்.

விரைவில் இணையும்

இரட்டை இலையையும், அ.தி.மு.க.வையும் சசிகலா மீட்டெடுப்பார். அ.ம.மு.க.வும், அ.தி.மு.க.வும் விரைவில் இணையும். நமக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட செயலாளர்கள் சேகர், ராஜேஸ்வரன், காமராஜ், செந்தமிழன், சந்திரமோகன், மணிவேலு, தலைமை நிலைய செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story