முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்


முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 10 Aug 2019 10:15 PM GMT (Updated: 10 Aug 2019 7:26 PM GMT)

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் தொழிற்கல்வி படிக்கும் குழந்தைகள் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் 2019-20-ம் கல்வி ஆண்டிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் இரண்டு முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு மட்டுமே இச்சலுகையின் கீழ் பயன்பெற இயலும். இத்திட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் மகனுக்கு மாதம் ரூ. 2,500 வீதம் 12 மாதங்களுக்கு ரூ.30 ஆயிரமும், முன்னாள் படைவீரர்களின் மகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் வீதம் 12 மாதங்களுக்கு ரூ. 36 ஆயிரமும் வழங்கப்படுகிறது. முதலாம் ஆண்டு விண்ணப்பிக்கவில்லை என்றால் அடுத்த ஆண்டிற்கும் விண்ணப்பிக்க இயலாது. மேலும் www.ksbgov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது, முன்னாள் படைவீரர் விவரங்கள் பூர்த்தி செய்து, உதவி இயக்குனரின் கையொப்பம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும். கல்லூரி முதல்வரிடமிருந்து பெற்ற கல்லூரியில் படிப்பதற்கான உறுதி மொழி சான்று அசல் மற்றும் வேறு எந்த பிரிவின் கீழும் கல்வி உதவித்தொகை பெறப்படவில்லை என்ற உறுதிமொழிச் சான்றில் மாணவர் கையொப்பம் மற்றும் முன்னாள் படைவீரரின் கையெழுத்து இருக்க வேண்டும்.

10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (அசல் அல்லது சுய கையொப்பமிட்ட சான்று நகல்). குறைந்தபட்ச கல்வி தகுதிக்கான மதிப்பெண் பட்டியல் (பிளஸ்-2), டிப்ளமோ, கல்லூரி மதிப்பெண் பட்டியல் அசல் சான்று அல்லது பள்ளி, கல்லூரி முதல்வரின் கையொப்பமிட்ட சான்று, முன்னாள் படைவீரர்கள் என்பதற்கான சான்றாக ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை அசலை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவ, மாணவியின் ஆதார் அட்டை அசல், மாணவ, மாணவியின் வங்கி கணக்கு புத்தக நகல் (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க்) வங்கியில் மட்டுமே கணக்கு வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு முன்பு இத்திட்டம் குறித்து அறிவுரைகளை தெளிவாக படித்து பார்த்து பின்பு பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்காணும் ஆவணங்களை பதிவேற்றம் செய்த பின்பு விண்ணப்பம் மற்றும் இதர ஆவணங்களை பதிவிறக்கம் செய்து வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story