மாணவ-மாணவிகள் சமூக அக்கறையை வளர்த்துக்கொள்ள வேண்டும் - கலெக்டர் அறிவுரை


மாணவ-மாணவிகள் சமூக அக்கறையை வளர்த்துக்கொள்ள வேண்டும் - கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 10 Aug 2019 11:00 PM GMT (Updated: 10 Aug 2019 7:41 PM GMT)

ராமநாதபுரத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விழிப்புணர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் சமூக அக்கறையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கி பேசினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் பள்ளிக்கல்வி துறை மற்றும் பத்மராஜம் கல்விக்குழுமம் ஆகியவை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ‘வெற்றி மேல் வெற்றி’ என்ற தலைப்பிலான விழிப்புணர்வு வழிகாட்டும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நான்காம் தமிழ்ச்சங்கம் தலைவர் ராஜா குமரன்சேதுபதி, மதுரை செந்தமிழ் கல்லூரி செயலாளர் ராணி லெட்சுமி நாச்சியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு மாணவ-மாணவிகள் நலனுக்காக பள்ளிக்கல்வி துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அவர்களுக்கு தன்னம்பிக்கையை மேம்படுத்திடும் வகையிலும், தங்களது எதிர்காலம் குறித்து தெளிவான சிந்தனையை ஏற்படுத்த உறுதுணை புரியும் வகையிலும் இந்த விழிப்புணர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

2018-19-ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளிகளில் தேர்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் முதல் இடத்தையும், அனைத்து பள்ளிகளின் தேர்ச்சியில் மாநில அளவில் 2-ம் இடத்தையும் பெற்றது. மாணவ-மாணவிகள் கல்வியறிவோடு நல்லொழுக்கத்தையும் சமூக அக்கறையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தங்களது எதிர்கால வளர்ச்சிக்காக விருப்பமான எந்த துறையை தேர்வு செய்தாலும் நல்லொழுக்கம், கடின உழைப்பு என்ற 2 பண்புகளே வெற்றிக்கு வழிவகுக்கும்.

அதே வேளையில் சமூக அக்கறையுடன் மரக்கன்று நடுதல், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல் போன்ற நற்காரியங்களிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) முத்துச்சாமி, பத்மராஜம் கல்விக்குழுமம் தலைவர் பாலன், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் ஆகியோர் தன்னம்பிக்கை உரையாற்றினர். நிகழ்ச்சிகளை புலவர் சங்கரலிங்கம் தொகுத்து வழங்கினார். முடிவில் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Next Story