நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேர் மீட்பு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்


நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேர் மீட்பு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
x
தினத்தந்தி 10 Aug 2019 11:15 PM GMT (Updated: 10 Aug 2019 8:05 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை,

மதுரையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5-ந் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நான் உள்பட அதிகாரிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தோம். மழை தற்போது குறைந்து வருவதால் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் குந்தா, உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 155 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இது வரை 55 முகாம்களில் 3500-க்கும் மேற்பட்ட நபர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இது மட்டுமல்லாது மிகவும் தாழ்வான பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் உள்ளவர்களை 24 மணி நேரமும் கண்காணித்து அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

கனமழையால் இறந்த நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அவலாஞ்சியில் அதிக அளவு மழை பெய்துள்ளதை தொடர்ந்து அந்த பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்த மின்நிலையம் பாதிப்படைந்துள்ளது. அதை சரி செய்யும் பணியும் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story