மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்ட ரூ.13 லட்சம் தங்க சங்கிலிகள் பறிமுதல் 4 பயணிகளிடம் விசாரணை


மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்ட ரூ.13 லட்சம் தங்க சங்கிலிகள் பறிமுதல் 4 பயணிகளிடம் விசாரணை
x
தினத்தந்தி 11 Aug 2019 11:00 PM GMT (Updated: 11 Aug 2019 5:30 PM GMT)

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பயணிகளிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செம்பட்டு,

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அங்கிருந்தும் விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சிலர் தங்கம், மின்னணு பொருட்கள், வெளிநாட்டு பணம் போன்றவற்றை கடத்தி வருவார்கள்.

இதைத்தடுக்க திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் பல பயணிகளிடம் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று காலை வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மலேசியாவை சேர்ந்த முத்துராமன் பாண்டியன்(வயது 40), முருகன் முனியன்(38), சிங்காரவேல் ராமசாமி(42), தமிழ்செல்வம்(46) ஆகிய 4 பயணிகள் தங்கள் உடலில் மறைத்து தங்க சங்கிலிகளை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 363 கிராம் எடை கொண்ட 4 தங்க சங்கிலிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், அவர்கள் 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்க சங்கிலிகளின் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும்.

Next Story