தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 11 Aug 2019 10:30 PM GMT (Updated: 11 Aug 2019 10:26 PM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகளை வைக்க விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல்,

தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 27-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் வெடிபொருள் சட்டம் மற்றும் வெடிபொருள் விதிகள் கீழ் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை, பொது சேவை மையங்களில் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கட்டிட அமைவிட வரைபடத்தின் நகல்கள், விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், விண்ணப்பதாரரின் முகவரி குறித்த ஆவணம், உரிம கட்டணம் ரூ.500-க்கான அரசு கருவூல சலான், உள்ளாட்சி அமைப்பினரிடம் இருந்து பெற்ற பல்வகை வரி ரசீது உள்ளிட்டவை விண்ணப்பதுடன் இணைக்கப்பட வேண்டும்.

மேலும் சொந்தக் கட்டிடம் எனில் பட்டா, வாடகை கட்டிடம் எனில் ஒப்பந்தப்பத்திரம் மற்றும் ஆவணங்களையும் அத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

பின்னர் விண்ணப்பத்தினை இணையதள வாயிலாக பதிவு செய்துவிட்டு, 6 நகல்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளிக்க வேண்டும். தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story