உடுமலையில் 4 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு; கண்காணிப்பு கேமராவையும் தூக்கிச் சென்ற ஆசாமிகள்


உடுமலையில் 4 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு; கண்காணிப்பு கேமராவையும் தூக்கிச் சென்ற ஆசாமிகள்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:30 PM GMT (Updated: 12 Aug 2019 5:26 PM GMT)

உடுமலையில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடி சென்றனர். மேலும் அதில் ஒரு கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.

உடுமலை,

உடுமலை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த சாலையில் 24 மணிநேரமும் வாகன போக்குவரத்து இருக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடை உரிமையாளர்கள் கடைகளை பூட்டி விட்டு சென்றனர்.பின்னர் நேற்று காலையில் வழக்கம் போல் கடைகளை திறக்க அதன் உரிமையாளர்கள் வந்தனர். அப்போது அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து உடுமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

அப்போது 2 சாக்கு மண்டி கடைகளின் ஷட்டர்களின் பூட்டை உடைத்த ஆசாமிகள், மண்டிக்குள் சென்று உள்ளனர். அங்கு பணம் இல்லாததால் அதன் அருகில் உள்ள ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற ஆசாமிகள், அந்த கடையின் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். பின்னர் இந்தகடையை அடுத்துள்ள உரக்கடைக்கு சென்ற ஆசாமிகள் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கு மேஜையில் இருந்த ரூ.400-ஐ திருடிச்சென்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கடைவீதியில் அடுத்தடுத்துள்ள கடைகளில் பூட்டை உடைத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து கடை உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஒரு கடையில் இருந்து ரூ.400 திருட்டு போயிருப்பதாகவும் மற்ற கடைகளில் பணம் எதுவும் திருட்டு போகவில்லை என்றும் கூறியுள்ளனர்.

Next Story