மோடியும், அமித்ஷாவும் ஹிட்லர்-முசோலினி என்பதை ரஜினி விரைவில் புரிந்து கொள்வார் பாலகிருஷ்ணன் பேட்டி


மோடியும், அமித்ஷாவும் ஹிட்லர்-முசோலினி என்பதை ரஜினி விரைவில் புரிந்து கொள்வார் பாலகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 12 Aug 2019 11:15 PM GMT (Updated: 12 Aug 2019 6:41 PM GMT)

மோடியும்-அமித்ஷாவும், கிருஷ்ணனும்-அர்ஜூனனும் அல்ல. அவர்கள் ஹிட்லர்-முசோலினி போன்றவர்கள் என்பதை ரஜினி விரைவில் புரிந்து கொள்வார் என திருவாரூரில், பாலகிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கிருஷ்ணன்-அர்ஜூனன்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுவரொட்டி ஒட்டிய மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர் மோடி அரசின் தலையாட்டி பொம்மைகளாக செயல்பட்டு வருகின்றனர். இதே நிலை நீடித்தால் மாவட்டம் முழுவதுமுள்ள மாணவர்்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

சென்னையில் நடந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை வரவேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், மாநிலங்களவையில் அமித்ஷா, வரலாற்று சிறப்புமிக்க உரை நிகழ்த்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் மோடியும்-அமித்ஷாவும், கிருஷ்ணனும்-அர்ஜூனனும் போல செயல்படுகின்றனர். இதில் யார் கிருஷ்ணன்? யார் அர்ஜூனன்? என அவர்களுக்கு தான் தெரியும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஹிட்லர்-முசோலினி

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இப்போது புரிய தொடங்கி விட்டது. போகப்போக அவர்கள் இருவரும் ஹிட்லரும்-முசோலினியும் போன்றவர்கள் என்பதை விரைவில் நடிகர் ரஜினிகாந்த் புரிந்து கொள்வார். மேட்டூர் அணை அபாய கட்டத்தை நெருங்குவதற்கு முன்னதாகவே படிப்படியாக தண்ணீரை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நீர்நிலைகளில் தண்ணீர் சேமிக்க ஏதுவாக இருக்கும்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை கைவிட்டு காவிரி படுகையை மேம்படுத்த ஆய்வு குழு அமைத்து தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story