சீர்காழியில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அவதி


சீர்காழியில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அவதி
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 12 Aug 2019 6:58 PM GMT)

சீர்காழியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதனால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

சீர்காழி,

சீர்காழி கீழ மடவிளாகத்தில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சீர்காழி நகர் பகுதி, சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தற்போது 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, நூலக வசதி, விளையாட்டு மைதானம், போதிய வகுப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

நடவடிக்கை

தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியது. இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், போதிய வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியிலும், மாடிப்படியிலும் அமர்ந்து படித்து வருகின்றனர். மேலும், ஆய்வக வசதி இல்லாமல் மாணவர்கள் படிக்க சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால், மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத அவலநிலை இருந்து வருகிறது. இதனால் மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக அடிப்படை வசதிகளுடன் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story