கீழடி அகழ்வாராய்ச்சி பணி: திண்ணை வடிவிலான திட்டு, சிமெண்டு சுவர் கண்டுபிடிப்பு


கீழடி அகழ்வாராய்ச்சி பணி: திண்ணை வடிவிலான திட்டு, சிமெண்டு சுவர் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 11:30 PM GMT (Updated: 12 Aug 2019 7:27 PM GMT)

திருப்புவனம் அருகே நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியில் நேற்று திண்ணை வடிவிலான திட்டு மற்றும் சிமெண்டால் ஆன சிறிய சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம்,

திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடந்த 2017-ம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. அதன் பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் சார்பில் மாநில தொல்லியல் துறையினர் இந்த அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் 5-வது கட்ட ஆராய்ச்சி பணிக்காக விவசாயிகள் கருப்பையா, முருகேசன், போதகுரு மற்றும் மாரியம்மாள் ஆகியோர் நிலங்களில் பல குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. முருகேசன் என்பவரது நிலத்தில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணற்றில் 7 உறைகள் கொண்டதாக இருந்தது. இந்நிலையில் நேற்று அந்த கிணற்றில் மேலும் உறைகள் காணப்பட்டு தற்போது அவை 8 உறைகள் கொண்ட கிணறாக காட்சியளிக்கிறது.

இது தவிர முருகேசன் நிலத்தில் திண்ணை வடிவிலான சிறிய திட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஓரங்களில் பழைய மணல் பூச்சில் சுவர் போன்று அமைந்துள்ளது. அது பார்ப்பதற்கு சிமெண்டு கலவையால் ஆன சுவர் போன்று உள்ளது. மேலும் கருப்பையா என்பவரது நிலத்தில் கூடுதலாக 4 குழிகள் தோண்டவும், மாரியம்மாளின் சகோதரி நீதி என்பவரது தென்னந்தோப்பில் புதிதாக குழிகள் தோண்டி ஆராய்ச்சி செய்யவும், அதற்கான அந்த இடங்களை சுத்தம் செய்து அளவு குறியீடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. நீதி என்பவரது நிலத்தில் குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி செய்யும் போது பண்டைய நாகரீகம் குறித்து மேலும் பல பொருட்கள் கிடைக்கும் என தெரிய வருகிறது.

Next Story