தூத்துக்குடியில் வறுமையின் கொடுமையால் பரிதாபம்: இறுதிச்சடங்குக்கு பணம் இல்லாததால் தாயின் உடலை குப்பையில் வீசிய மகன்


தூத்துக்குடியில் வறுமையின் கொடுமையால் பரிதாபம்: இறுதிச்சடங்குக்கு பணம் இல்லாததால் தாயின் உடலை குப்பையில் வீசிய மகன்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:30 PM GMT (Updated: 12 Aug 2019 8:27 PM GMT)

வறுமையின் கொடுமையால் பெற்ற தாயின் உடலை இறுதிச்சடங்கு செய்ய இயலாமல் அவரது மகனே குப்பையில் வீசிய பரிதாப சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி தனசேகரன்நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. அந்த குப்பை தொட்டியில் சேர்ந்த கழிவுகளை சேகரிக்க துப்புரவு தொழிலாளர்கள் நேற்று அதிகாலையில் அங்கு வந்தனர். அப்போது குப்பைத்தொட்டிக்கு அருகில் சிதறிக்கிடந்த குப்பைக்கழிவுகளுக்கு மத்தியில் பெண் பிணம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வறுமையின் காரணமாக பெற்ற தாயின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாததால் அவரது மகனே குப்பை தொட்டியில் வீசி சென்ற பரிதாப சம்பவம் தெரியவந்து உள்ளது.

பிணமாக கிடந்த அந்த பெண்ணின் பெயர் வசந்தி (வயது 50). அவருடைய கணவர் நாராயணசாமி. இவர்களுக்கு முத்துலட்சுமணன் (29) என்ற மகன் உள்ளார். நாராயணசாமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு சென்று, அங்குள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் வசந்தி தனது மகன் முத்துலட்சுமணனுடன் வசித்து வந்தார். முத்துலட்சுமணன் கோவில் பூசாரியாராக உள்ளார். அவர் போதிய வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வசந்தி நோய்வாய்ப்பட்டு இருந்த போதிலும் அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்தார்.

தனது தாய்க்கு இறுதிச்சடங்கு செய்ய தன்னிடம் பணம் இல்லாததால் முத்துலட்சுமணன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். மனதை கல்லாக்கிக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார். தனது வீட்டுக்கு அருகே உள்ள குப்பைத்தொட்டிக்கு அருகில் தாயின் உடலை வீசினால் அதை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்து சென்று அடக்கம் செய்து விடுவார்கள் என்று நினைத்து அங்கு தாயின் உடலை வீசி உள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வசந்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது சமூகத்தை சேர்ந்தவர்களின் உதவியுடன் இறுதிச்சடங்கு நடந்தது.

இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வறுமையின் கொடுமையால் இறுதிச்சடங்கு செய்ய இயலாமல் பெற்ற தாயின் உடலை மகனே குப்பையில் வீசிய சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Next Story