திருப்பூர் ரெயில்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை அகற்ற வேண்டும்; மாநகர போலீசாருக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் கோரிக்கை


திருப்பூர் ரெயில்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை அகற்ற வேண்டும்; மாநகர போலீசாருக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Aug 2019 9:45 PM GMT (Updated: 12 Aug 2019 8:47 PM GMT)

திருப்பூர் ரெயில்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீசாருக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகருக்குக்குட்பட்ட பகுதிகளில் திருப்பூர் வடக்கு, தெற்கு, மத்திய, ஊரகம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், பூண்டி, வீரபாண்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் இருசக்கர வாகனங்கள் போலீஸ் நிலைய வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்படும். போதிய இடம் இல்லாத போலீஸ் நிலையங்களில் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் வளாகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

அந்த வகையில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் ஒரு பகுதி போலீஸ் நிலைய வளாகத்திலும், மீதமுள்ள நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இருசக்கர வாகன நிறுத்தும் இடம் மற்றும், பிற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி இங்கு, மொத்தம் 130 வாகனங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள், மழை, வெயிலில் சேதமடைந்து, உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.

மேலும், பெரும்பாலான இடத்தை அந்த வாகனங்கள் ஆக்கிரமித்து இருப்பதால், ரெயில்வே நிர்வாகமும், வாகன நிறுத்தும் இட குத்தகைதாரர்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால், பறிமுதல் வாகனங்களை ரெயில்வே நிலைய வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைஎடுக்க ரெயில்வே நிர்வாகம், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், வடக்கு போலீஸ் நிலையத்திற்கு கோரிக்கை மனுவும் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ரெயில்வே வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளபறிமுதல் வாகனங்களை அப்புறப்படுத்த பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் இந்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. கோரிக்கை மனு மீது, உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு போலீசார்தெரிவித்தனர்.

Next Story