காற்றின் வேகம் குறைந்ததால் 10 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்


காற்றின் வேகம் குறைந்ததால் 10 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்
x
தினத்தந்தி 12 Aug 2019 11:15 PM GMT (Updated: 12 Aug 2019 10:01 PM GMT)

காற்றின் வேகம் குறைந்ததால் 10 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் கடந்த 10 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்றின் வேகம் குறைந்ததை தொடாந்து 10 நாட்களுக்கு பிறகு ராமேசுவரத்தில் நேற்று விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது.500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வடக்கு கடலான பாக்ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.10 நாட்களுக்கு பிறகு செல்வதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்பில் மீனவர்கள் சென்றுள்ளனர்.

இதேபோல் மண்டபத்தில் இருந்தும் நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு சொந்தமான தரையிலும், தண்ணீரிலும் செல்லும் ஹோவர் கிராப்ட் கப்பலில் இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் முதல் ராமேவரம், தனுஷ்கோடி வரையிலான இந்திய கடல் பகுதி வரையிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததுடன் மீன்பிடி விசைப்படகுகளில் ஏறி மீனவர்களின் அடைாயள அட்டை, படகின் ஆர்.சி.புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து இந்திய கடல் எல்லை தாண்டி மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

இதேபோல் 10 நாட்களுக்கு பிறகு பாம்பன் பகுதியில் இருந்து இன்று காலை 100 விசைப்படகுகளில் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

Next Story