டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: கல்லணையில் கலெக்டர் ஆய்வு


டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: கல்லணையில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 5:17 PM GMT)

டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கல்லணையில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தஞ்சை-திருச்சி மாவட்டங்களின் எல்லையில் உள்ள கல்லணைக்கு வந்தவுடன் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் திறந்துவிடப்படும். இதனால் கல்லணைக்கு நேற்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று மதகுகள் எல்லாம் முறையாக பராமரிக்கப்பட்டு இருக்கிறதா? என ஆய்வு செய்தார்.

பின்னர் கல்லணைக்கால்வாயில் மணல் திட்டுகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்படும் பணியையும், கல்விராயன்பேட்டையில் கல்லணைக்கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியையும் பார்வையிட்டு, அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உத்தரவு பிறப்பித்தார்.

குடிமராமத்து பணி

தஞ்சையை அடுத்த பூண்டி சின்னகுளம் தூர்வாரும் பணி குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்து கரைகளை பலப்படுத்த வேண்டும் என அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பின்னர் அவர், நெய்குன்னம் ஐவேலி தோட்டத்தில் வெண்ணாற்றின் குறுக்கே நபார்டு நிதி ரூ.3 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியை பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும், மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Next Story