கும்மிடிப்பூண்டி அருகே சிறுமிகளை வைத்து விபசாரம்; பெண் கைது


கும்மிடிப்பூண்டி அருகே சிறுமிகளை வைத்து விபசாரம்; பெண் கைது
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 7:32 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மாநெல்லூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் இந்து (வயது 26). இவர் மீது ஏற்கனவே பல வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு உல்லாசமாக சுற்றித்திரிந்து பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இந்து, தற்போது அவரது வீட்டிலேயே சிறுமிகளையும், பெண்களையும் வைத்து விபசாரம் செய்து வருவதாக கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் உத்தரவின்பேரில் கும்மிடிப்பூண்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் வாடிக்கையாளர்கள் போல் இந்து வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது 15 மற்றும் 18 வயது கொண்ட 2 சிறுமிகள், 25 வயது மதிக்கத்தக்க சென்னையை சேர்ந்த கணவரிடம் இருந்து பிரிந்து வந்த பெண் ஒருவர் என மொத்தம் 3 பேரை வீட்டில் தங்க வைத்து தானும் அவர்களுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து 2 சிறுமிகளையும் திருவள்ளூர் மாவட்ட சைல்ட் ஹெல்ப் லைன் அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். சென்னையை சேர்ந்த பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் இளம்பெண் இந்துவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story