முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகைகள்-ரூ.2¾ லட்சம் திருட்டு


முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகைகள்-ரூ.2¾ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 7:38 PM GMT)

வெள்ளியணை அருகே முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகைகள் மற்றும் ரூ.2¾ லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வெள்ளியணை,

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மணவாடி அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி(வயது 56). தாந்தோன்றி ஒன்றிய முன்னாள் கவுன்சிலரான இவர், அதே பகுதியில் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 11-ந் தேதி காலை, கந்தசாமி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று விட்டார்.

நேற்று அதிகாலை வீடு திரும்பிய கந்தசாமி, உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள அலமாரி திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 26 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிய வந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து வெள்ளியணை போலீசில் கந்தசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டின் கதவு, அலமாரி, பீரோ போன்றவற்றில் மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் தொடர்புடைய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story