திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு டீ வினியோகம் செய்வதில் மோதல்; வாலிபருக்கு வெட்டு, சகோதரர்கள் கைது


திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு டீ வினியோகம் செய்வதில் மோதல்; வாலிபருக்கு வெட்டு, சகோதரர்கள் கைது
x
தினத்தந்தி 13 Aug 2019 11:30 PM GMT (Updated: 13 Aug 2019 8:05 PM GMT)

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு டீ வினியோகம் செய்வதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக வாலிபருக்கு கத்தியால் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் சத்திரம் அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 33). இவருக்கும், செங்காடு காந்தி நகரை சேர்ந்த கதிர்(25), அவரது சகோதரர் ஆனந்த் (26) ஆகியோருக்கும் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காண்டிராக்ட் முறையில் டீ வினியோகம் செய்வது தொடர்பாக கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணி போளிவாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த சகோதரர்கள் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்றனர். இதைத்தொடர்ந்து சுப்பிரமணி அங்கு இருந்த மாந்தோப்பில் புகுந்து தப்பியோடினார். இருப்பினும் அவரை விரட்டி சென்ற இருவரும் கையால் தாக்கி கத்தியால் தலை, கையில் வெட்டியுள்ளனர்.

இதையடுத்து சுப்பிரமணி சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சுப்பிரமணி மணவாளநகர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சகோதரர்களான கதிர், ஆனந்த் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story