திருச்சியில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம் போலீசாரின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை


திருச்சியில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம் போலீசாரின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 8:40 PM GMT)

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி போலீசாரின் அணிவகுப்பு மற்றும் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை நடத்தப்பட்டது.

திருச்சி,

சுதந்திர தின விழா நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளன.

திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கிறார். இதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குவார்.

அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தினவிழாவையொட்டி திருச்சி ஆயுதப்படை மைதானத்தை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கி விட்டன. நேற்று காலை சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போது ஆயுதப்படை போலீசார் துப்பாக்கிகளை பிடித்தபடி வீரநடை போட்டு அணிவகுத்து சென்றனர்.

பள்ளி மாணவிகளின் பலவிதமான கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகையும் நடத்தப்பட்டது. இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் பாரம்பரிய இசை நடனம் மற்றும் மேற்கத்திய இசைக்கேற்ற படி நடனம் ஆடினர். இயற்கையை பாதுகாத்தல், நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கும் விதமான நிகழ்ச்சிகளின் ஒத்திகையும் நடந்தது. திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Next Story